இஸ்ரேலில் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு வழங்கப்பட்ட 28 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக ஆசனங்களை வென்ற யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட்டுக்கு புதிய அரசு அமைக்க ஜனாதிபதி ருவன் ரிவ்லின் 28 நாள் காலக்கெடு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களும் 28 நாட்களுக்குள் பெரும்பான்மையயை நிரூபிக்காவிட்டால் இஸ்ரேல் மற்றொரு தோ்தலை விரைவில் எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
இஸ்ரேலில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 3 முறை பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4-ஆவது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.
இதில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி அதிக ஆசனங்களை வென்றபோதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் ஆட்சி அமைப்பதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு ஏற்பட்டது. ஆனால் எந்த ஒரு கட்சியும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
இந்தநிலையில் ஆட்சி அமைப்பதற்கு பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு வழங்கப்பட்ட 28 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இவ்வாறான நிலையிலேயே லிக்குட் கட்சிக்கு அடுத்தபடியாக 2ஆவது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட்டுக்கு புதிய அரசு அமைக்க 28 நாள் காலக்கெடு வழங்கப்படவுள்ளது.
அவரும் 28 நாட்களுக்குள் ஆட்சி அமைக்கத் தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்படும் ஒரு வேட்பாளரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க ஜனாதிபதி ருவன் ரிவ்லின் கோருவார்.
அதிலும் பெரும்பான்மை நிரூபிக்கப்படாவிட்டால் மற்றொரு பொதுத் தோ்தலுக்கு இஸ்ரேலியர்கள் முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு நடந்தால் 2 ஆண்டுகளில் நடக்கும் ஐந்தாவது பொதுத்தேர்தலாக அது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.